சீனாவை தமிழகம் மிஞ்ச வேண்டும்: பெகாட்ரான் திறப்பு விழாவில் முதல்வர்!
சீனாவிற்கு பதிலாக தமிழ்நாட்டை புதிய செல்போன் மாடல்களின் உற்பத்தி மையமாக மாற்றிட திமுக அரசு செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
செங்கல்பட்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் பெகாட்ரானின் நவீன ஆலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 30) பங்கேற்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
” உயர் தொழில்நுட்பத் திட்டங்களையும், பெருமளவில் வேலைவாய்ப்பினை அளிக்கும் திட்டங்களையும் கொண்டுவர தமிழக அரசு பெரு முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஒவ்வொரு துறையிலும், மதிப்புக்கூட்டு உற்பத்தியை மேற்கொள்ளும் திட்டங்களையும் பன்முகப்படுத்தும் முயற்சிகளையும் திமுக அரசு வரவேற்கிறது.
இதுபோன்ற முயற்சியால்தான், அண்மையில் தமிழகத்தில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது சீனாவில்தான் புதிய செல்போன் மாடல்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன.
அதனை மாற்றி தமிழ்நாட்டையும் அத்தகைய உற்பத்தி மையமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்கோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
ஸ்மார்ட்போன்கள் உற்பத்திக்கான முழு விநியோக சங்கிலியையும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரும் முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
இத்தகைய நேரத்தில் பெகாட்ரான் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி திட்டம் இங்கு துவக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக பெகாட்ரான் நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேநேரம் உங்களுடைய இரண்டாவது கட்ட உற்பத்தித் திட்டத்தையும் விரைவில் நீங்கள் இங்கே தான் துவங்க வேண்டும்.
துவங்க போகிறீர்கள் என்பதையறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அரசுத் தரப்பில் அதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் உங்கள் விரிவாக்கத் திட்டத்தையும், மின் உற்பத்தி திட்டங்களையும் தமிழகத்திலேயே தொடங்க வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கையாக வைக்கிறேன்.
உங்களைப் போன்றே பிற தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் தொழில் துவங்க அழைத்து வாருங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
2வது பெரிய நிறுவனம்!
ஆப்பிள் நிறுவனத்திற்கு 3 உலகளாவிய ஐஃபோன்கள் தயாரிப்பாளர்கள் உள்ளனர். அவற்றில் விஸ்ட்ரான் & ஃபாக்ஸ்கான் ஏற்கனவே இந்தியாவில் தங்கள் உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளன.
இந்நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனத்துக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் 2-வது முன்னணி நிறுவனமான பெகட்ரான், பல்லாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து, செங்கல்பட்டில் தனது கிளையைத் தொடங்கியுள்ளது.
இதன் மூலம் 6000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
2 லட்சம் வேலைவாய்ப்புகள்: அரசின் முதலீடுகள்!
திமுக அமைச்சர்களை கடுமையாக சாடிய குஷ்பு