மனசாட்சியோடு யோசித்துப் பாருங்கள்: மின்கட்டண உயர்வு குறித்து டிடிவி தினகரன்
மின்கட்டணம் உயர்வுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டணம் இன்று (செப்டம்பர் 10)முதல் 200 யூனிட்டுகளுக்கு ரூ.27.50, 300 யூனிட்களுக்குரூ.72.50 , 400 யூனிட்களுக்கு ரூ147.50 என அதிகரித்து வசூலிக்கப்படவுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்த போது கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இன்று முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததால் பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் தினகரன், “அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெயரளவுக்குக் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்திவிட்டு, அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காமல் இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். வீட்டு வாடகை, கடை வாடகை போன்றவை உயர்வதற்கும், ஏற்கனவே நெருக்கடியிலிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவதற்குமே மின் கட்டண உயர்வு வழிவகுக்கும். மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் தி.மு.க அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரியா
மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் ஜவுளி தொழில் காணாமல் போகும்: விசைதறியாளர்கள்!