தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் கனமழை பெய்ததை தொடர்ந்து, நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது.
தென்மாவட்டங்களில் திரும்பும் பக்கமெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. சாலைகள் சேதமடைந்து பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன
இந்த பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
இதுகுறித்து டெல்லியில் இன்று (டிசம்பர் 22) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், “தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைத் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. மற்ற மாநிலத்துக்கு அறிவிக்கிறார்கள், தமிழ்நாட்டுக்கு அறிவிக்கவில்லை என்றெல்லாம் இல்லை.
ஒருவேளை மாநில அளவில் பேரிடர் என்று அறிவிக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு ஏற்ற வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. நிதி ஆணையம் வழங்கும் பரிந்துரைகளை வைத்துக்கொண்டு, இந்த வழிமுறைகளையும் வைத்து பேரிடரை அறிவிக்கலாம். மாநிலத்திடம் இருக்கக் கூடிய மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 10 சதவிகிதம் வரை எடுத்து, இதற்கு உபயோகிக்கலாம். அதை தவிர தேசிய பேரிடர் என்று அறிவிக்க வேண்டும் என்ற சிஸ்டமே மத்திய அரசிடம் இல்லை” என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“ஸ்டாலினுக்கு மக்களை விட இந்தியா கூட்டணி முக்கியமா?”: நிர்மலா சீதாராமன் பேட்டி!