இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள தமிழக மீனவர்கள் 15 பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த நவம்பர் 5ம் தேதி, ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
கச்சத்தீவிற்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மன்னார் கடற்படையினர், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து 15 மீனவர்களையும் விரட்டிச் சென்று நெடுந்தீவு அருகே சிறை பிடித்தனர். இது, மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 7) கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில், ”தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், பாக்ஜலசந்தி பகுதியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்கின்றன.
இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக ரீதியிலான வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும் வெளியுறவுத் துறை மந்திரி உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்