வருமான வரி : ரஜினிக்கு விருது!

அரசியல்

நாட்டில் வருமான வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவுகூரும் வகையில், வருமான வரித் துறை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 ஆம் தேதியை வருமான வரி தினமாகக் கடைப்பிடித்து வருகிறது. அதன்படி இன்று (ஜூலை 24) நாடு முழுவதும் வருமான வரித்துறை நாள் கொண்டாடப்படுகிறது.

ஜூலை 24, 1860 இல், பிரிட்டிஷ் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்த சர் ஜேம்ஸ் வில்சன் இந்தியாவில் முதல் முறையாக வருமான வரியை அறிமுகப்படுத்தினார். 1857 இல் நடந்த முதல் சுதந்திரப் போரின்போது பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வில்சன் இதைச் செய்தார். இந்த நடைமுறை கொண்டு வந்த முதல் ஆண்டிலேயே 30 லட்சம் ரூபாய் வசூலானது. தொடக்கத்தில் செல்வந்தர்கள் மற்றும் பிரிட்டிஷார் மீது மட்டுமே வருமான வரி விதிக்கப்பட்டது. தற்போது, நிறுவன வரி, தனிநபர் வருமான வரி, பரிவர்த்தனை வரி உள்ளிட்ட வரிகள் விதிக்கப்படுகின்றன.

அதன்படி கடந்த ஏப்ரல் 1, 2021 முதல் கடந்த மார்ச் 16 வரை 13.63 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச்சூழலில் இன்று 162ஆவது வருமான வரி நாளை முன்னிட்டு சரியாக வரி கட்டியவர்கள் மற்றும் அதிக வரி கட்டியவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்னை டிடிகே சாலையில் நடைபெற்ற வருமான வரி நாள் நிகழ்ச்சியில் தெலங்கானா/புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் சரியாக வரி செலுத்துவோரைப் பாராட்டி தமிழிசை சவுந்தரராஜன் விருது வழங்கினார். அதிகமாக வரிகட்டியதாக நடிகர் ரஜினிகாந்த்துக்கு விருது வழங்கப்பட்டது. அவ்விருதை ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் தமிழக புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை ஆணையர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரியா

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0