சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து!

அரசியல்

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய வீடியோவை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பகிர்ந்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று(டிசம்பர் 3)நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

அப்போது சைகை மொழியில் மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினர். இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க உலக மாற்றுத்திறனாளி தினமான இன்று(டிசம்பர் 3) தாய்த்தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் உபகரணங்களை வழங்கிய அவர், அங்கு திரையிடப்பட்ட “ஸ்வாஷ்” என்ற மராத்தி திரைப்படத்தையும் பார்த்து விட்டு, மாணவர்களோடு உரையாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மாற்றுத் திறனாளிகளின் சிரிப்பிலும், மகிழ்விலும் மறைந்த முன்னாள் தலைவர் கலைஞரை பார்ப்பதாக கூறினார். சைகை மூலமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பெருமைப்பட வைத்துள்ளது என்றார்.

மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாக தெரிவித்த அமைச்சர், தயவு செய்து பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஓப்பீடு செய்து, பிரித்து பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து விடு, அவர்களை நான் வாழவைத்து விடுகிறேன் என்று முதலமைச்சர் தன்னிடம் சொன்னதாக குறிப்பிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ, உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என்பதை சைகை மூலம் மேடையில் செய்து காட்டி மாணவிகளை உற்சாகமூட்டினார்.

கலை.ரா

பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள்: ஜே.என்.யூ-வில் புதிய கட்டுப்பாடு!

டிசம்பர் 16 : பேராசிரியர்  அன்பழகன் நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *