காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பை குறிக்கத்தான் தமிழகம் என்று பயன்படுத்தினேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ட்விட்டரில் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.
இதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விடுத்த அழைப்பிதழிலும் தமிழக ஆளுநர் என்றே குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் ஆளுநர் உரை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திமுக நிர்வாகிகள் குடியரசுத் தலைவரிடம் புகாரும் அளித்தனர்.
இந்தநிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழ்நாடு சர்ச்சை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், “2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த “காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்’ ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி’ நடைபெற்றது.
அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.
அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.
எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.”
எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
முதியவரை பைக்கில் இழுத்துச் சென்ற இளைஞர்: பெங்களூருவில் நிகழ்ந்த கொடுமை!
ஸ்ரீஹரிகோட்டாவில் 3 ஆவது தற்கொலை: கணவர் இறந்த சோகத்தில் உயிரை மாய்த்த மனைவி!