இரண்டு நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தொடர் : அப்பாவு அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 9 மற்றும் 10 தேதிகளில் இரண்டு நாட்கள் மட்டும் நடத்தப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு இன்று (டிசம்பர் 2) தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “அலுவல் ஆய்வு கூட்டத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசித்தோம். அதன்படி வரும் 9, 10 ஆகிய இரண்டு நாட்களில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் நாளில் கூடுதல் செலவினங்களுக்காக மானிய கோரிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்வார்கள். அன்றைய தினமே மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர இருக்கிறார்.
பேரவையின் இரண்டாம் நாளன்று பல விவாதங்கள் நடைபெற்று பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும்” என அப்பாவு தெரிவித்துள்ளார்.
10 நாட்கள் கேட்டோம்!
இதற்கிடையே கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக பேரவை கொறடா வேலுமணி இருவரும் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “நூறு நாட்கள் பேரவை கூட்டத்தை நடத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். ஆனால், அந்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை.
இந்த முறை மழை வெள்ளம், தொகுதி மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும் என்பதற்காக 10 நாட்கள் கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரியிருந்தோம். ஆனால் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிக்க மறுக்கப்பட்டு வந்தது என்பதை தாண்டி, சட்டபேரவை கூட்டத்தொடரை 10 நாட்கள் நடத்துவதற்கும் திமுக அரசும், பேரவை தலைவரும் மறுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் : எடப்பாடி
’விஜய் வருகையால் பயமில்லை’ : லண்டனில் இருந்து திரும்பிய அண்ணாமலை பேட்டி!