மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்ற குழுவின் 38ஆவது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
அப்போது பேசிய அமித்ஷா, “மொழியை மதிக்காமல் பாரம்பரியத்தை மதிப்பது முழுமை அடையாது. இந்தி உள்ளூர் மொழிகளுடன் போட்டியிடவில்லை. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே தேசம் அங்கீகாரம் பெறும்.
இந்தி மொழியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் அதற்கான ஏற்பை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்தியை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்வது அவசியம் என்று அமித்ஷா கூறியதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 5) கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், “எதிர்ப்பு இன்றி அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சரின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்கு கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும்.
இதைக்கேட்டு நடக்க தமிழகம் தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல. தமிழகத்துக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும் டெல்லிக்கு சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பாஜகவின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம்.
மேற்கு வங்கம் கர்நாடகா போன்ற மாநிலங்களும் இந்தி திணிப்புக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இதை அமித்ஷா உணர வேண்டும்.
1965 மொழி புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என்று எச்சரிக்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரியா