இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 100-வது பிறந்த நாளை இன்று (டிசம்பர் 26) கொண்டாடுகிறார்.
சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்று நல்லகண்ணுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், நல்லகண்ணு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, நல்லகண்ணு பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நமது மாநிலத்திற்கும், தமிழ் மக்களுக்கும் நல்லகண்ணு ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ஆம் ஆண்டு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது.
இன்று அவரது நூறாவது பிறந்த நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியபோது, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் அமைத்திட உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் நல்லகண்ணு அவர்களின் பெருமையைப் போற்றும்வகையில், ஸ்ரீவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு “தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்” எனப் பெயரிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆன்ட்ராய்டில் புக் செய்தால் ஒரு கட்டணம்: ஐபோனில் புக் செய்தால் விலை அதிகம்… வாடகை கார் தில்லாலங்கடி?