அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வர் கடிதம்!

Published On:

| By Kalai

போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்கவேண்டும் என்று அனைத்து எம்.எல்.ஏ-க்களும் முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார்.

விளையும் பயிர்களை நாசம் செய்யும் களையாகச் சமூகத்தில் முளைத்துவிட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டை  வேரோடும் – வேரடி மண்ணோடும் களையெடுக்க அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் பங்குபெறும் சிறப்பு கலந்தாய்வுக்கூட்டம்  ஆகஸ்ட் 10-ம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர்  அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இளைய சமுதாயத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில், “இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் பாதிப்புகள் குறித்து உங்களின் கவனத்தை ஈர்க்கவே இக்கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன். சமூகத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டையும், நடமாட்டத்தையும் முற்றிலுமாக ஒழிக்க , உறுதியேற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பையும், ஆதரவும் அளிக்கவேண்டும்.

போதைப் பாதை அழிவுப்பாதை என்பதை நாடும் நாட்டு மக்களும் அறிவார்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவே அதனைப் பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி, மொத்தமாக அதனுள் மூழ்கிவிடுகிறார்கள்.

போதைப் பொருட்கள் அவர்களது சிந்தனையை அழித்துவிடுகிறது. வளர்ச்சியை தடுத்துவிடுகிறது. எதிர்காலத்தைப் பாழாக்கி, அவர்களது குடும்பத்தையும் அழித்துவிடுகிறது. இது சமூகத்தின் – நாட்டின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கின்றது.

ஆகஸ்டு 11 போதைப் பொருளுக்கு எதிரான நாள்

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களை முற்றிலும் அழித்தாக வேண்டும். அதனை யாரும் சிறிதளவு கூட பயன்படுத்தாமல் தடுத்தாக வேண்டும். அதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசு சட்டவழியிலான அனைத்து முறைகளையும் பின்பற்றி வருகிறது. அதேநேரத்தில், போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அரசின் மிக முக்கியக் கடமையாக நான் நினைக்கிறேன். போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இதன் ஒருபகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11-ம் நாளை, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

அன்றைய நாள், பள்ளி – கல்லூரிகளில் இதுதொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போதையின் தீமைகள் குறித்த காணொளிக் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தங்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்,

“அன்றைய நாள், தங்களது தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தாங்களும் தவறாது பங்கேற்கவேண்டும். இது அரசியல் பிரச்சினை அல்ல: நாட்டின் எதிர்காலம் குறித்த பிரச்சினை! குறிப்பாக, இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கை குறித்த பிரச்சினை. எனவே, நீங்கள் இதில் உங்கள் பங்களிப்பினை வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ச்சியான பரப்புரைகளின் மூலமாகத்தான் போதைப் பொருட்களின் தீமையை உணர்த்த முடியும். அதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய உங்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம். போதைப் பாதை அழிவுப்பாதை என்பதை உணர்த்துவோம்! அதன் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

என்.ஐ.ஏ. வேட்டை

தமிழகத்தில் சமீப காலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரித்து வருகின்றன. மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் போதை மருந்து கடத்தல் மாஃபியாக்கள் தொடர்பாக திருச்சி சிறப்பு முகாம் உள்ளிட்ட இடங்களில் ரெய்டே நடத்தியது.

இன்னொரு பக்கம் டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சா ஒழிப்புக்காக ஆபரேஷன் கஞ்சா 2..0 என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆயினும் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருட்கள் பற்றி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாமக போதை பொருள் ஒழிப்புக்காக ஆர்பாட்டமே நடத்தியுள்ளது. இந்த நிலையில்தான், அரசியலைக் கடந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் போதைப் பொருள் ஒழிப்பு பற்றி கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

-கலை.ரா

நமது அம்மா நாளிதழின் புதிய ஆசிரியர் கல்யாணசுந்தரம் !

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel