தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று (ஜனவரி 18) சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்குமான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆளுநர் ரவி, சனாதனம், இந்து மதம் குறித்து மேடை தோறும் பேசி வருகிறார். இதனை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்த்து வருகிறது.
சமீபத்தில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியதும் சட்டமன்றத்திலிருந்து அவர் வெளிநடப்பு செய்ததும் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த வாரம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வழங்கிய கடிதத்தை அளித்தனர்.
இந்த விவகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு சென்றது.
இந்தநிலையில், இன்று டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ரவி, உள்துறை செயலாளர் அஜய் பல்லா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து திமுகவின் புகார் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
ஆசிரியர் நியமனம்: வெயிட்டேஜ் முறை ரத்து!
விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல 125 சிறப்பு பேருந்துகள்!