அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீச்சு: பாஜகவினர் 5 பேர் கைது!

Published On:

| By Prakash

மதுரையில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணியை வீசிய பாஜகவினர் 5 பேர் இன்று (ஆகஸ்ட் 13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல், இன்று (ஆகஸ்ட் 13) மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு, தமிழக அரசு சார்பில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆனால், அமைச்சருக்கு முன்பாக அஞ்சலி செலுத்த தங்களை அனுமதிக்கக் கோரி பாஜகவினர் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது அஞ்சலி செலுத்திவிட்டு அமைச்சர் காரில் புறப்பட்டதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அவரது காரை வழிமறித்து காலணிகளை வீசினர்.

அமைச்சரின் காரை மறித்து மறியலில் ஈடுபடவும் பாஜகவினர் முயன்றனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுதொடர்பாக பாஜகவினர் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெ.பிரகாஷ்

பல்கலைத் தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக தலைவருக்காக எழுதியவர் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.