தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ரவி முட்டுக்கட்டையை உருவாக்குகிறார் என்று உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 7) கண்டித்துள்ளது. supreme court warns governor
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாகவும், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களில் தலையிடுவதாகவும் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜே.பி.பரிதிவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் நேற்று (பிப்ரவரி 6) விசாரணைக்கு வந்தபோது, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்தது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று காலை மீண்டும் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜராகி, “சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு பல்வேறு அதிகாரங்களும் கடமையும் உள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள், உட்பிரிவு 1-ன் படி விரோதமானது என ஆளுநர் கருதினாலே, மசோதாவை நிறுத்தி வைக்க முடியும். மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு எந்த கால நிர்ணயமும் அரசியல் சாசனத்தில் செய்யப்படவில்லை.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் நடத்துகிறார். ஆனால், அரசு தரப்பில் சில துணை வேந்தர்களை தொடர்புகொண்டு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள்” என்றார்.
அப்போது நீதிபதிகள், “மசோதாவை ஆளுநர் ஏன் நிறுத்தி வைத்தார் என்பதை விளக்க வேண்டும். அதை அரசுக்கு அறிவிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இல்லையா?
மசோதாவை நிறுத்தி வைக்கும் போது அதை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் அல்லது மறுபரிசீலனை செய்யுங்கள். மாநில அரசு இதை எப்படி சமாளிக்கும்? அரசுக்கு நீங்கள் தான் முட்டுக்கட்டையை உருவாக்கியிருக்கிறீர்கள், அதை நீங்கள்தான் அகற்ற வேண்டும்” என்று தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல், “மசோதாக்கள் அனுப்பப்பட்ட 2 மாதங்களில் ஆளுநர் தனது முடிவை தெரிவித்துவிட்டார். அதன்படி, தமிழக அரசு அனுப்பிய 12 மசோதாக்களில் 7 மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்” என்றார். upreme court warns governor