எடப்பாடி டெண்டர் வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

அரசியல்

எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்களுக்கு வழங்கியது தொடர்பான வழக்கு நாளை (ஜூலை 26) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

எடப்பாடி பழனிசாமி 2011ம் ஆண்டுமுதல் 2016ம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது நெடுஞ்சாலைத் துறை திட்டங்களில் அவரது உறவினர்களுக்கு ரூபாய் 4,800 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கி ஆதாயம் அடைந்ததாகவும், இதனை விசாரிக்க வேண்டும் எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று மாத காலத்துக்குள் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் அப்போதைய அதிமுக அரசின் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு 4 ஆண்டுகள் விசாரணைக்கு வராமலேயே இருந்தது. இந்த நிலையில், இன்று (ஜூலை 25) காலை இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி தமிழ்நாடு ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சார்பில் முறையீடு வைக்கப்பட்டது. இந்த முறையீட்டை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், விரைவில் விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்க இருக்கிறது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு தமிழ்நாட்டு அரசியலிலும், அதிமுக என்ற கட்சிக்குள்ளும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *