ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சரா? – செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

“உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய மறுநாளே செந்தில் பாலாஜி அமைச்சராகிறார். இந்த வழக்கில் என்ன நடக்கிறது?” என்று நீதிபதி அபய் எஸ்.ஓகா இன்று (டிசம்பர் 2) சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜாமீன் வழங்கிய பிறகு செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றதால், விசாரணை பாதிக்கும். இதனால் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி அபய் எஸ்.ஓகா, “நாங்கள் ஜாமீன் தருகிறோம், மறுநாளே நீங்கள் போய் அமைச்சராகிறீர்கள். ஒரு மூத்த கேபினட் அமைச்சராக உங்கள் பதவியால், சாட்சிகள் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். என்ன நடக்கிறது இங்கே?

பாலாஜியின் செல்வாக்கு மிக்க பதவியின் காரணமாக அவருக்கு எதிராக சாட்சியமளிப்பதற்கு சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்பதை உச்சநீதிமன்றம் கண்காணிக்கும். இந்த வழக்கில் இன்று உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை, வழக்கின் விசாரணையை டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்” என்று நீதிபதி தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

share market: Paytm க்கு SEBI எச்சரிக்கை- இன்றைக்கு கண் வைக்கப்படும் பங்குகள் எவை?

எடப்பாடியின் ஊழல் அத்தியாயங்கள்: ஸ்டாலின்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts