அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் அடுத்தவாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவினை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பன்னீர் செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குதல் உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 13ஆம் தேதி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து ஈபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஓபிஎஸ் தரப்பின் மனுவை விசாரித்தால் தங்கள் தரப்பு நியாயத்தை கேட்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஓபிஎஸ் தொடர்ந்த மனு இன்று (ஜூலை 22) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், அதிமுகவில் கட்சி உறுப்பினர்கள் நீக்கப்படுவதால் கட்சியின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படு கிறது. எனவே தங்களது மேல்முறையீட்டு மனுக்களை அவசர வழக்காக வரும் திங்கள் கிழமை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதனை ஏற்ற தலைமை நீதிபதி ரமணா, அதிமுக பொதுக்குழு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் அடுத்தவாரம் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரத்தில் வழக்கினை வரும் திங்கள்கிழமை (ஜூலை 25) எடுக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா