தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 23) உத்தரவிட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர்களின் அதிகாரத்தை வரையறுக்கும் தேர்தல் ஆணைய சட்டம் 1991ன் பிரிவு 4ல் அவர்களின் பதவிக்காலம் அதிகபட்சம் 6 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை அவர்கள் தேர்தல் ஆணையர்களாக நீடிக்கலாம் என சட்டம் கூறுகிறது.
எனினும் கடந்த சில ஆண்டுகளாக தலைமை தேர்தல் ஆணையர்கள் மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.
தேர்தல் ஆணையர் நியமன வழக்கு!
இந்நிலையில் தேர்தல் ஆணைய நியமனத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தொடர்ந்து இன்றும் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது நீதிபதி ஜோசப் தலைமையிலான அமர்வு நீதிபதிகள், தேர்தல் ஆணையர் நியமனத்தில் எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்கள் குறித்து மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
மத்திய அரசு வெற்று வார்த்தைஜாலம்!
அவர்கள் கூறுகையில், “1950களில் தலைமை தேர்தல் ஆணையர்கள் 8 ஆண்டு காலம் அந்த பொறுப்பில் இருந்துள்ளனர். ஆனால், கடந்த 2004க்குப் பிறகு அவர்கள் சில நூறு நாட்கள் மட்டுமே தலைமை தேர்தல் ஆணையர்களாக இருக்க முடிகிறது.
அவர்களுக்கு 65 வயது ஆகிவிட்டதை காரணம் காட்டி அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு விடுகிறது. இதனால், தேர்தல் ஆணையம் பலவீனமாகவே இருக்கிறது.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 8 ஆண்டுகளில் 6 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாக இருந்துள்ளனர். தற்போதைய தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு 2015ல் இருந்து 2022 வரையிலான 7 ஆண்டுகளில் 8 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாகி உள்ளனர்.
தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட இருப்பவர்களின் பிறந்த தேதி அரசிடம் இருப்பதால், அதை அரசு பயன்படுத்திக்கொள்கிறது. இது மிக மிக மோசமான நடவடிக்கை.
தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து மத்திய அரசு பேசுவதெல்லாம் வெறும் வாய்வார்த்தைதான். தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்படுபவர்கள் குறுகிய காலத்தில் ஓய்வு பெறுவதை கருத்தில் கொண்டே மத்திய அரசு நியமனங்களை மேற்கொள்கிறது.
சரியான நபர் தேவை
தேர்தல் ஆணையத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்ட டி.என். சேஷன் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்திற்குத் தேவை. பலவீனமான தேர்தல் ஆணையர்களின் தோள்களில் அதிகப்படியான அதிகாரச் சுமை உள்ளது.
எனவே, இந்த பொறுப்புக்கு மிகச் சரியான நபர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் விரும்புகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

எதன் அடிப்படையில் நியமனம்?
மேலும் ”வழக்கு விசாரணைக்கு வந்த சில தினங்களுக்கு முன்னர் கடந்த 19ஆம் தேதி அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நியமனத்தில் என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டன? எதன் அடிப்படையில் அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
எனவே தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய அரசின் வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி, இத்தகைய ஆவணங்களை கேட்பது தேவையில்லாத ஒன்று என்ற வாதத்தை முன்வைத்தார்.
அதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முழுமையாக நிராகரித்ததோடு, ஆவணங்கள் அனைத்தும் கண்டிப்பாக நாளை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
மீனவர்கள் போராட்டம்: கேரளாவிலும் ஒரு தூத்துக்குடியா?
இதெல்லாம் பழனிசாமிக்கு மறந்துவிட்டதா?: தங்கம் தென்னரசு கேள்வி!