புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 28) தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் ஊழல் நடந்ததாக துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான மணிஷ் சிசோடியாவை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கு மார்ச் 4-ஆம் தேதி வரை சிபிஐ விசாரணை காவல் அளிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ கைது செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. டெல்லியில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று அவசியமில்லை.
டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகலாம். இதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
செல்வம்
Comments are closed.