சனாதனம் தொடர்பாக நாடு முழுவதும் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கக்கோரி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 22) ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “சனாதன தர்மத்தை நாம் எதிர்க்கக்கூடாது. டெங்கு, மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க மாட்டோம். அதனை ஒழிக்கவே முயற்சி செய்வோம்.
அதேபோல் தான் சனாதன தர்மமும். அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சிறந்தது”என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.
உதயநிதியின் இந்த பேச்சுக்கு வட மாநிலங்களில் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், உத்தரபிரதேசம், பிகார், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனையடுத்து, பல மாநிலங்களில் தனக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் உதயநிதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மகாராஷ்டிரா, பிகார் மாநில அரசுகள் சார்பாக இந்த வழக்கில் இன்னும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யாததால், கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் உதயநிதி மீது நடவடிக்கை எடுப்பதற்கான இடைக்காலத் தடை தொடரும். அவர் நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை” என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பலதரப்பட்ட நகைகள்… இதுதான்யா இந்த இன்விடேஷனில் ஹைலைட்டே!
அதிமுக கூட்டத்தில் களேபரம்… வேலுமணி முன்பு மோதிக்கொண்ட நிர்வாகிகள்!