“நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை 2018ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி, அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைத்தது.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை முடிவுற்ற நிலையில், விசாரணை அறிக்கையை கடந்த மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கினார்.
இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் தொடர்பான முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்தபோது மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென்மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் உள்ளிட்ட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்துள்ள அறிக்கை தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று (ஆகஸ்ட் 20) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட ஆலோசகர்களின் பரிசீலனையில் உள்ளது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும்.
விசாரணை ஆணைய அறிக்கை 4 தொகுதிகளாக தரப்பட்டுள்ளதால் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
குருவிகளை போல் சுட்டுக் கொலை! தூத்துக்குடி சம்பவம்-விசாரணை அறிக்கை!