ராமதாஸ் குறித்த ஸ்டாலின் பேச்சு : அண்ணாமலை விமர்சனம்!

Published On:

| By christopher

Stalin's speech on Ramadoss: Annamalai criticism!

அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (நவம்பர் 25) செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ’அதானி தமிழ்நாட்டில் யாரை வந்து சந்தித்தார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறாரே?’ என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “அவருக்கு வேறு வேலையில்லை. அவர் தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஓகே…” என்று கோபமாக பதிலளித்து சென்றார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பதில் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “ராமதாஸ் குறித்து பேசியதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என  பாமக தலைவரான அன்புமணி கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவரான அண்ணாமலை, இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

அதில், “தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் ஸ்டாலின் மறந்து விட்டார் போலும்.

ராமதாஸ் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?

அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ராமதாஸ் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

“பெண்களுக்கு பாதுகாப்பில்லா சமூகம், ஒருபோதும் விடுதலை அடையாது” : கனிமொழி

காப்பீடு திட்டத்தில் மோசடி? முதல்வருக்கு அரசு ஊழியர்கள் கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share