சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று (ஏப்ரல் 3) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த மாநாடு டெல்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க், கன்னாட் பகுதியில் மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் காணொலி காட்சி வாயிலாக மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தலைமை உரை ஆற்றுகிறார்.
கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்கி பாஜக அல்லாத 37 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். சமூக நீதி கொள்கையை முன்னெடுத்து பிற்படுத்தப்பட்ட பழங்குடியின பட்டியிலின மக்களின் நலன்களை பாதுகாத்திட இந்த கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் சமூக நீதி கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று நடைபெறுகிறது. சமூக நீதிக்கான போராட்டத்தையும் சமூக நீதி இயக்கத்திற்கான தேசிய கூட்டு திட்டத்தையும் முன்னெடுத்து செல்வது தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக முன்னெடுக்கும் இந்த மாநாடு தேசிய அரசியலில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற முதல்வர் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று பேசியிருந்தார்.
ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து திரிணாமூல், பாரத ராஷ்டிரிய சமிதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் சற்று இணக்கணமான சூழலை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் தேசிய மாநாடு என்பது 2024-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முன்னெடுப்பாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால் சமூக நீதி கூட்டமைப்பு மாநாடு தேசிய அரசியலில் மிக முக்கியமான விவாத பொருளாக மாறியுள்ளது.
செல்வம்