முதல்வர் மு.க.ஸ்டாலினின் மழை வெள்ள பணிகள் குறித்து விமர்சனம் செய்திருந்த பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனை விமர்சிக்கும் வகையில், பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சாமி கடந்த நவம்பர் 1ஆம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பினர்.
நவம்பர் 5, 7, 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

ஆனால் அவர் எந்தத் தேதியிலும் ஆஜராகவில்லை. அதேநேரத்தில், விசாரணைக்கு ஆஜராகாத கிஷோர் கே.சாமி, முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக இன்று (நவம்பர் 18) விசாரணைக்கு வந்தது.
அப்போது கிஷோர் கே.சாமி தரப்பில் தனது நண்பரை குறிப்பிட்டு மட்டுமே ட்விட்டரில் பதிவு செய்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில், ”இதேபோல சமூக ஊடகங்களில் பிறரை துன்புறுத்தும் வகையில் கருத்துக்கள் பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இதுபோல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி அல்லி பிறப்பித்த உத்தரவில், விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பிய நோட்டீசுக்கு ஆஜராகாதவருக்கு முன்ஜாமீன் வழங்கினால்,
நீதிமன்றம் இந்த சமூகத்திற்கு தவறான தகவலை தெரிவிப்பதாகிவிடும் எனக் கூறி கிஷோர் கே.சாமியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஜெ.பிரகாஷ்
Comments are closed.