மலக்குழி மரணங்கள்: அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு!

அரசியல்

நவீன இயந்திரங்களையும் கருவிகளையும் பயன்படுத்தி தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றி கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் வகையிலான திட்டத்தை நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கழிவுநீர் தொட்டிகள்‌ மற்றும்‌ பாதாளச்‌ சாக்கடைகளில்‌ ஏற்படும்‌ இறப்புகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும்‌ நடவடிக்கைகள்‌ குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “தமிழ்நாடு பல்வேறு சமூக பொருளாதார குறியீடுகளில்‌ வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும்‌ ஒரு குறியீட்டில்‌ மட்டும்‌ பின்தங்கிய நிலையில்‌ உள்ளது.

அது என்னவென்றால்‌, கழிவு நீர்த்‌ தொட்டிகளைச்‌ சுத்திகரிக்கும்போது. உயிரிழக்கும்‌ நபர்களின்‌ எண்ணிக்கை தான்‌. அது குறித்த செய்திகள்‌ நமக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றன. அதனைத்‌ தவிர்க்க வேண்டிய கடமையும்‌ பொறுப்பும்‌ இந்த அரசுக்கு உள்ளது.

தமிழ்நாட்டில்‌, தொழில்‌ துறை. தகவல்‌ தொழில்நுட்பத்‌ துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில்‌ நாம்‌ முன்னணியில்‌ இருக்கிறோம்‌. அப்படியிருக்கும்போது, நம்மால்‌ ஏன்‌ இந்த அவலநிலையை மாற்ற முடியவில்லை என்பதை நாம்‌ சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்‌. பாதாளச்‌ சாக்கடைகளையும்‌, கழிவுநீர்த்‌ தொட்டிகளையும்‌, மனிதர்களே சுத்தம்‌ செய்யும்‌ நடைமுறை மானுடத்திற்கே களங்கமாய்‌ விளங்குகிறது.

கழிவுநீர்த்‌ தொட்டிகளை சுத்திகரிக்கும்‌ பணியில்‌ ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவர்களின்‌ விவரங்களை சமீபத்தில்‌ ஆய்வு செய்தேன்‌. இத்தகைய இறப்புகள்‌ பெரும்பாலும்‌, நகரப்‌ பகுதிகளில்‌ நடைபெறுகின்றன.

கழிவுநீர்‌ தொட்டிகளை சுத்தம்‌ செய்யும்போது அப்பணியாளர்கள்‌ உயிரிழக்கும்‌ நிலையை மாற்றுவதற்காகத்‌ தான்‌, இப்பணியை இயந்திரங்கள்‌ மூலம்‌ மேற்கொள்ள கடந்த 20-2-2023 அன்று தலித்‌ இந்தியன்‌ சேம்பர் ஆஃப் காமர்ஸ் இண்டஸ்ட்ரீ என்னும்‌ அமைப்புடன்‌ சென்னை குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்று வாரியத்தால்‌ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ என்‌ முன்னிலையில்‌ கையெழுத்தானது.

கடந்த பட்ஜெட்‌ உரையில்‌, இந்தப்‌ பணியில்‌ ஈடுபடுவோர்களை தொழில்‌ முனைவோர்களாக மாற்றும்‌ பொருட்டு. “அண்ணல்‌ அம்பேத்கர்‌ தொழில்‌ முன்னோடிகள்‌ திட்டம்‌” என்ற புதிய திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்‌ முதற்கட்டமாக சென்னை பெருநகரப்‌ பகுதியில்‌ நவீன இயந்திரங்களையும்‌ கருவிகளையும்‌ பயன்படுத்தி, தூய்மைப்‌ பணியாளர்களைத்‌ தொழில்முனைவோர்களாக மாற்றி, குடிநீர்த்‌ தொட்டிகளை சுத்தம்‌ செய்யும்‌ பணியில்‌ ஈடுபடுத்தத்‌ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத்‌ திட்டத்தினை அடுத்த நான்கு மாதங்களில்‌ முழுமையாக செயல்பாட்டிற்குக்‌ கொண்டு வரவேண்டும்‌ என்று நகராட்சி நிர்வாகத்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளரை‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

மேலும்‌, இந்தப்‌ புதிய திட்டத்திற்காகக்‌ காத்திராமல்‌, இனிமேல்‌ தமிழ்நாட்டில்‌ எந்தவொரு இறப்பும்‌, கழிவுநீர்‌ சுத்திகரிப்பால்‌ நேரக்கூடாது என்பதை மனதில்‌ கொண்டு நகராட்சி நிர்வாகத்‌ துறை, ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை பேரூராட்சித்‌ துறை அலுவலர்கள்‌ செயல்பட வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

செல்வம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0