தப்பு கணக்கு போடாதீங்க எதிர்க்கட்சித் தலைவரே? – அதிமுக வாக்குறுதிகளை பட்டியலிட்டு ஸ்டாலின் கேள்வி!

Published On:

| By Kavi

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை சென்றுள்ளார்.

இன்று (ஜனவரி 22) சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.1.6 கோடியில் மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.

389 வாக்குறுதிகள் நிறைவேற்றம்

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்ன என்ன செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு மேடையிலும் நான் புள்ளிவிவரத்துடன் சொல்லி வருகிறேன்.

இதையெல்லாம் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! என்ன செய்வது? அதனால், வாய்க்கு வந்தபடியெல்லாம் பொத்தாம் பொதுவாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

20 விழுக்காடு வாக்குறுதிகளைகூட நிறைவேற்றவில்லை என்று எரிச்சலில் புலம்பியிருக்கிறார். நான் கேட்க விரும்புவது – அவரால் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா? திண்ணையில் உட்கார்ந்துக்கொண்டு வெட்டிப்பேச்சு பேசுவது போன்று, வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சித் தலைவர் பேசலாமா?

மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. காரணம், நாங்கள் அரசாங்கத்தில் இருக்கிறோம். அரசை வழிநடத்திக்கொண்டிருக்கிறோம். அதனால் உங்களிடம் புள்ளிவிவரத்தோடு சொல்ல விரும்புகிறேன். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக சார்பில் கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம்! இன்னும் 116 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றப்படவேண்டும்!

அரசில் மொத்தம் 34 துறைகள் இருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் இரண்டு-மூன்று திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அளவில்தான் மீதம் இருக்கிறது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஒப்புக்கொள்கிறோம். இல்லை என்று மறுக்கவில்லை. இதை தெரிந்தும் தெரியாதது போன்று, எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார்! பாவம் அவர்! மற்றொரு கட்சித் தலைவர் அறிக்கையை அப்படியே Copy-Paste செய்து வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார், பேசிக்கொண்டு இருக்கிறார்.

அதிமுக வாக்குறுதிகள்

இப்போது வாய்ச்சவடால் விடும் எதிர்க்கட்சித் தலைவர் 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களின் போது, அ.தி.மு.க. சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளை எடுத்து ஒவ்வொரு வாக்குறுதிக்கு கீழும், அதை நிறைவேற்றிய நாள், அதற்கான அரசாணை எண், அதனால் பயனடைந்தவர்கள் விவரம் என்று பட்டியலிட்டு புத்தகமாக வெளியிடுவதற்கு தயாராக இருக்கிறாரா?

முழுவதுமாக பத்தாண்டுகள் ஆட்சி செய்து, தமிழ்நாட்டை அதல பாதாளத்தில் தள்ளியதை மக்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைத்து, புது புதுக்கதைகளோடு வருகிறார்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலைத் திட்டம் என்று சொன்னார்களே! நிறைவேற்றினார்களா?. மகளிருக்கு 50 விழுக்காடு மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று சொன்னார்களே! யாருக்காவது கொடுத்திருக்கிறார்களா?. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்போன் வழங்கப்படும் என்று சொன்னார்களே! கொடுத்தார்களா?.

தென் தமிழகத்தில் ‘ஏரோ பார்க்’ வந்துவிட்டதா?. பத்து ஆடை அலங்காரப் பூங்காக்கள் என்று அறிவித்தார்களே, எங்கு இருக்கிறது?. 58 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்று சொன்னார்களே! யாராவது அப்படி பயணம் செய்திருக்கிறீர்களா?. பொது இடங்களில், இலவச ‘Wi-Fi’ என்று சொன்னார்களே! எந்த இடத்திலாவது அந்த வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்களா?.

இப்படி வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாழாக்கியவர்கள் – தமிழ்நாடு திவாலாகிவிட்டது என்று புது புரளியைக் கிளப்புகிறார்கள். , தமிழ்நாடு என்ன நிலைமையில் இருந்தது?

2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உபரி வருவாய் மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை, 2013-ஆம் ஆண்டு முதல் பற்றாக்குறை மாநிலமாக மாற்றியதுதான், அ.தி.மு.க. அரசு! 2017-19 ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிகளவு வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை தத்தளிக்க விட்டார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான நெருக்கடியிலிருந்து, தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம்! இத்தனைக்கும், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முதுகு வளைந்து சேவை செய்த அவர்களுக்கு இணக்கமான ஒன்றிய அரசு இருந்தது! அப்போதும் எதையும் கேட்டு பெறவில்லை! பதவிக்காக மட்டும் டெல்லிக்கு சென்றார்கள்!

ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதே ஒன்றிய அரசு, நம்மை தமிழ்நாடு அரசாகப் பார்க்காமல், கொள்கை எதிரிகளாக பார்த்து திட்டங்களை முடக்கினார்கள்! ஒன்றிய அரசின் அந்த ஓரவஞ்சனைகளையும் மீறிதான், தமிழ்நாட்டை முன்னேற்றிக்கொண்டு இருக்கிறோம்! ஒன்றிய அரசின் திட்டங்களுக்கும், மாநில அரசின் நிதியை செலவு செய்து திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்!

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் கையாலாகாத நிர்வாகச் சீர்கேடுகள் ஒருபுறம் – ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாராமுகம் மறுபுறம்! தமிழ்நாட்டை ஒன்றிய அரசு எப்படி வஞ்சிக்கிறது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இரண்டு நாட்களுக்கு முன்பு விலாவாரியாக பேட்டி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறார்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் அது எதையும் காதிலேயே வாங்குவதில்லை. அது எதையும் படிப்பதும் இல்லை! மிகவும் சாதாரணமாக தமிழ்நாடு திவால் ஆகிவிட்டது என்று சொல்கிறார் என்றால், தமிழ்நாடு திவால் ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணமா? என்று கேட்கத் தோன்றுகிறது.

இருட்டில் எடப்பாடி

மற்றொன்றும் சொல்கிறார். அரசு செய்வதெல்லாம் வெட்டி செலவாம். வெட்டி செலவு என்று எதை சொல்கிறார்? மகளிர் உரிமைத் தொகையை சொல்கிறாரா? காலை உணவுத் திட்டத்தை சொல்கிறாரா? எதை கொச்சைப்படுத்த இப்படி பேசுகிறார்?

எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே… எங்களுக்கு தெரியும், எந்த செலவு செய்தால் மக்களுக்கு நன்மை என்பது! உங்கள் நிர்வாகத்தை மக்கள் ஞாபக மறதியால் மறந்திருப்பார்கள் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள்!

எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே…. நீங்கள் போடும் எல்லா கணக்கும் தப்பு கணக்கு தான்! மக்கள் எங்களுடைய செயல்பாடுகளையும் – மக்கள் நலத்திட்டங்களையும் கணக்கு போட்டு முதல் மதிப்பெண் கொடுக்கிறார்கள்! எங்களுக்கு அது போதும்!

மற்றொன்றும் சொல்கிறார்… தி.மு.க. ஆட்சிக்கு 13 அமாவாசைகள்தான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு காலண்டரை கிழித்துக்கொண்டு இருக்கிறார். அதுதான் இப்போது அவருடைய வேலை. அவர் இருட்டில் உட்கார்ந்து அமாவாசையை எண்ணிக்கொண்டு இருக்கிறார். இருக்கட்டும் பரவாயில்லை… நாம் மக்களுக்கான நன்மைகளை எண்ணி, திட்டங்களை செயல்படுத்துவோம்! மக்களுடைய மகிழ்ச்சிளை மட்டும் எண்ணிப் பார்ப்போம்!” என்று குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share