ஸ்டாலின் செய்வது அநீதி : ராமதாஸ் காட்டம்!

Published On:

| By Kavi

இன்னுயிரை ஈந்தேனும் இழந்த சமூக நீதியை மீட்டெடுப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் பிறந்த நாளான செப்டம்வர் 17ஆம் தேதி சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

இந்த நிலையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக அரசு சமூக அநீதி கூடாரமாக திகழ்கிறது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று (செப்டம்பர் 16) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, நாளையுடன் 900 நாட்கள் ஆகிறது.

தமிழக அரசு நினைத்தால் இரண்டரை மாதங்களில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீட்டை வழங்கியிருக்க முடியும். ஆனால், இரண்டரை ஆண்டுகள் ஆகியும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இடைப்பட்ட காலத்தில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8 முறை கடிதங்கள் எழுதியிருக்கிறேன். பலமுறை தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் எனக்கு அளித்த வாக்குறுதி,‘‘ வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்’’ என்பது தான்.

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அன்புமணி ராமதாஸ், 3 முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார்.

பா.ம.க.வின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான மூத்த நிர்வாகிகளும் கட்சித் தலைமையின் பிரதிநிதிகளாக அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் குறைந்தது 50 முறையாவது சந்தித்து பேசியிருப்பார்கள்.

அவர்களிடமும் இதே கருத்தைத் தான் தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், திடீரென ஒரு நாள் நாங்களாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது; மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார் என்றால், அதன் பொருள், உழைக்கும் பாட்டாளி மக்களை திமுக அரசு நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டது என்பது தானே?

வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் திமுக அரசு, ஒவ்வொரு கட்டத்திலும் நாடகங்களை மட்டுமே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதற்கு அடுத்த வாரமே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால், 7 மாதங்கள் கழித்து 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையே மாற்றி அமைத்தது. அப்போதும் கூட வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான பணிகள் தொடங்கப்படவில்லை. மாறாக, 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து பரிந்துரை அளிக்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசு ஆணையிட்டது.

வன்னியர் இடஒதுக்கீடு குறித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டிய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், 20 மாதங்களாகியும் எதுவும் செய்யவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்ட அமைப்பாக செயல்பட வேண்டிய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், திமுக அரசின் சமூக அநீதி கூட்டாளியாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய சமூக அநீதி சக்திகளையெல்லாம் எதிர்த்து தான் நாம் நமது சமூகநீதி போராட்டத்தை நடத்திச் செல்ல வேண்டியுள்ளது.

இத்தகைய துரோகங்களும், கழுத்தறுப்புகளும் நமக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களில் இத்தகைய சதிகளையெல்லாம் கடந்து தான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 1980-ஆம் ஆண்டில் தொடங்கிய சமூகநீதிப் போராட்டத்தில் இத்தகைய துரோகங்களை ஏராளமாக சந்தித்திருக்கிறோம்.

சமூக நீதிக்காக பல கட்ட போராட்டங்களை நடத்தியும் நமது உரிமைக்குரலுக்கு தமிழக அரசு செவி சாய்க்காத நிலையில் தான், 1987&ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17&ஆம் நாளில் தொடங்கி ஒரு வாரத்திற்கு தொடர் சாலைமறியல் போராட்டத்தை அறிவித்திருந்தோம். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், மிகக் கொடிய தாக்குதல்களிலும் நமது பாட்டாளி சொந்தங்கள் 21 பேர் விலைமதிப்பற்ற இன்னுயிரை தியாகம் செய்தனர்.

அவர்கள் எந்த நோக்கத்திற்காக தங்களின் இன்னுயிரை ஈந்தார்களோ, அந்த நோக்கம் இன்று வரை நிறைவேறவில்லை. 20% இட ஒதுக்கீட்டைப் போராடி பெற்றுக் கொடுத்த நமது மக்களுக்கு, அந்த இட ஒதுக்கீட்டின் பயன்கள் உரிய அளவு கிடைக்கவில்லை. அதை வென்றெடுப்பதற்கான போரில் தான் ஏராளமான விழுப்புண்களை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாம் நமது இலக்கை எப்போது எட்டுவோம் என்ற சிந்தனையால், எனது பல இரவுகள் கண்ணுறக்கமின்றியே கழிகின்றன. இதே மனநிலையில் தான் நீங்களும் தவித்துக் கொண்டிருப்பீர்கள் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.

நமது சமூகநீதி இலக்கு குறித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டுடன் நமது சமூகநீதி நாளான செப்டம்பர் 17ஆம் நாளில் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

தலைவலியாய் தொடர்ந்த பஞ்சாயத்து… நடிகர் சங்கம் உதவியுடன் முடித்த தனுஷ்

”உங்ககிட்ட வாய் மட்டும்தான் இருக்கிறது” பாக். வீரர்கள் மீது யூனிஸ்கான் பாய்ச்சல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel