ஸ்டாலின் பாணியில் ஜெயக்குமார்
திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயக்குமார் இன்று (செப்டம்பர் 26) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “சொத்து வரி, மின்சார கட்டணத்தை கண்டித்து அமைப்பு ரீதியாக செயல்படும் 75 மாவட்டங்களில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு 75 மாவட்டங்களில் போராட்டம் நடத்த திராணி இருக்கிறதா?, ஓபிஎஸ் அணியில் ஆளே இல்லாத ஒரு நிலை உள்ளது.
பெண்கள் ஓசி பேருந்துகளில் செல்கிறார்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதை பெண்மையை அவமானப்படுத்தும் ஒரு செயலாகத் தான் பார்க்க முடியும். அரசாங்க பணத்தில் தானே பெண்கள் பயணம் செய்கிறார்கள்.
திமுக அமைச்சர்கள் தங்களை வானத்திலிருந்து குதித்தவர்களைப் போன்றும், நிலச்சுவான்தார்கள், பண்ணையாளர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள் போன்றும் தங்களை நினைத்துக் கொள்கிறார்கள்.
பதவிக்கு வந்தவுடன் கால் மேல் கால் போட்டு தோரணையாக உள்ளனர். தெலுங்கு படத்தில் வருகிற அமைச்சர்களை போல, தன்னிடம் மனு கொடுக்க வந்த குறவர் இன பெண்ணிடம் பேசாமல்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கால் மேல் கால் போட்டு தோரணையாக உட்கார்ந்து இருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் துப்பாக்கி கலாச்சாரம், பெட்ரோல் குண்டு கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது.
கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த அரசுக்கு திராணியில்லை, வக்கில்லை, தெம்பில்லை என ஸ்டாலின் பாணியிலே நான் சொல்கிறேன்.
இந்தியாவில் அரசியலமைப்பு சட்டப்படி தான் ஆட்சி நடைபெறுகிறது. மனுநீதிப்படி ஆட்சி நடைபெறவில்லை.
ஸ்டாலின் குடும்பத்திற்கு தேவையான நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கான வழியினை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
யாராக இருந்தாலும் மதத்தை இழிவுபடுத்துவது தவறு. அதிமுக ஆட்சியில் இதுபோன்று யாராவது பேசினால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்போம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆ.ராசாவை, குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும்” என்று ஜெயக்குமார் பேசினார்.
செல்வம்
திட்டங்களை பற்றி பேசுவோம் : திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்!
விழுப்புரத்தில் அண்ணா சிலை அவமதிப்பு!