விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (டிசம்பர் 6) நடைபெறுகிறது.
இந்த விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்பதாக இருந்த நிலையில், இன்று அவர் கலந்துகொள்ளவில்லை. கொள்கை பகைவர்களின் நோக்கம் நிறைவேற இடமளிக்கக்கூடாது என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ளவில்லை என்று திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
இந்தநிலையில், திருமாவை யாரும் பின்னிருந்து வழி நடத்திட முடியாது என்று ஆதவ் அர்ஜூனாவை விசிக துணைப் பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் மறைமுகமாக விமர்சித்துள்ளனர்.
இதுதொடர்பாக வன்னியரசு வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோரைக் கொள்கை ஆசான்களாக ஏற்றுக்கொண்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் களமாடி வருபவர் திருமா.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட பெண்கள் மற்றும் தலித்களின் விடுதலைக்காகவும் சமரசமின்றி பாடாற்றி வருபவர்.
தேர்தல் புறக்கணிப்பு காலத்தில் எப்படி தீவிரத்துடன் சனாதனக்கும்பலை எதிர்த்தாரோ அப்படித்தான், தேர்தல் பாதைக்கு வந்த பிறகும் களமாடி வருகிறார்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் சனாதனக்கும்பலை எதிர்த்துத் திணறவைப்பது சிறுத்தைகள் தான். அப்படிப்பட்ட பேரியக்கத்தை வழி நடத்திவரும் திருமாவை யாரும் பின்னிருந்து வழி நடத்திட முடியாது.
சில அரசியல் தரகர்கள் அப்படி முயற்சிக்கிறார்கள். இன்று நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், திமுக கொடுத்த நெருக்கடியால்தான் திருமா போகவில்லை என உள்நோக்கம் கற்பிக்கிறார்கள்.
2001 ஆம் ஆண்டு முதன்முறையாக திமுக கூட்டணியில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குப் போனார் திருமாவளவன். 2003 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினமா செய்தார்.
பதவிதான் வேண்டுமென்றால் திமுக தலைவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு பதவியில் தொடர்ந்திருக்கலாம். ஆனால், கொள்கை முக்கியமெனப் பதவியைத் துறந்தவர்.
அப்படிப்பட்டக் கோட்பாட்டு உறுதிமிக்கத் தலைவரை இழுத்த இழுப்புக்கெல்லாம் கொண்டு செல்ல முடியும் என சில தரகர்கள் முயற்சிப்பது அரசியல் சோகமாகும். தமிழ்நாட்டில் சில ஊடக நிறுவனங்கள் அம்பேத்கர் பெயரை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றன.
அம்பேத்கரின் கொள்கைகள் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, தங்களது அரசியல் சதி வெற்றி பெற வேண்டுமென அவர்கள் துடிக்கிறார்கள். அம்பேத்கர் பெற்றுத் தந்த தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்புச்சட்டங்களைத் தூக்கி எறிந்து விட்டு ஊடகவியலாளர்களைப் பணி நீக்கம் செய்த ஊடக நிறுவனங்களை எதிர்த்துப் போராடாத சில முன்னாள் ஊடகவியலாளர்கள், எப்போதும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் திருமாவை சுயநலத்துக்காக வசை பாடுகிறார்கள்.
அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என திருமா கூறவில்லை. அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் சொன்னார்.
ஆனால், நூல் வெளியீட்டாளர்கள் திருமாவைப் புறக்கணித்துவிட்டுப் பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம்.
ஆனால், திருமா நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பது திருமாவை அவமதிப்பது மட்டுமல்ல, அம்பேத்கரையும் அவமதிப்பதே ஆகும். நூல் வெளியீட்டாளர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், அம்பேத்கரும், திருமாவும் நெருப்பைப் போன்றவர்கள். அவர்களைப் பொட்டலம் கட்ட எவராலும் முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விசிகவின் துணைப் பொதுச் செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், “துடுப்பு போடாமல் படகில் கேளிக்கைக்காக அமர்ந்து இருப்பவனால் மட்டுமே படகை உலுக்கி நிலைகுலைய செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
பாலாஜி தனது பதிவில் ஆதவ் அர்ஜுனாவைதான் பெயர் குறிப்பிடாமல் தாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…