ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இன்று (நவம்பர் 6) முதல் வரும் நவம்பர் 8-ஆம் தேதி வரை 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழக சபாநாயகர் அப்பாவு, நேற்று (நவம்பர் 5) சிட்னி நகருக்கு சென்றடைந்தார்.
இன்று சிட்னி நகரில் டார்லிங் ஹார்பர் சர்வதேச மாநாட்டு மையத்தில் 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு தொடங்கியது.
பின்னர், மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற “பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு – வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியா உட்பட பல்வேறு காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற மற்றும் சட்டமன்றப் பேரவைத் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
காமன்வெல்த் பாராளுமன்ற தமிழ்நாடு கிளையின் சார்பாக இந்தக் கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “செயற்கை நுண்ணறிவு மூலம் தகவல்கள் எளிதாக கிடைப்பதால், சில நேரங்களில் தவறான தகவல்கள் மற்றும் தவறான செய்திகள் பரவுவதால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial intelligence) பயன்பாடு வெளிப்படையானதாகவும், உண்மைத் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தி பேசினார்.
முன்னதாக, அப்பாவு அரசு முறைப் பயணமாக மலேசிய நாட்டிற்கு சென்றிருந்தார். மலேசியா நாடாளுமன்றத்தின் தலைவர் ஜோஹாரி அப்துல், துணை அமைச்சர் குலசேகரன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, மலேசியா நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை பார்வையாளர் மாடத்திலிருந்து அப்பாவு பார்வையிட்டார்.
அப்போது மலேசியா நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு வருகை குறித்து அறிவித்ததும், உறுப்பினர்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னைக்கு கனமழை… 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
சாம்சங் ஊழியர்கள் பணிநீக்கம் – உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதியில்லை: நீதிமன்றம்!