கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்தும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விழுப்புரத்தில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்தேன். முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
கர்நாடகா தேர்தல் முடிவுகள் குறித்தும், பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் முதல்வர் ஸ்டாலினுடன் உரையாடினேன்.
பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக விரைவில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்தியாவை பாஜகவிடம் இருந்து காப்பாற்றுவதற்காக மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைய வேண்டும். சிறப்பான எதிர்கால இந்தியாவை உருவாக்குவதற்கு வகுப்புவாத சக்திகள் முறியடிக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனிச்சிறப்பு உள்ளது. மாநிலத்திற்கு ஏற்றபடி பாஜகவிற்கு எதிராக கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.
அரசியல் சாசனம், ஜனநாயகத்தை சீர்குலைக்கும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பது தான் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பின் முக்கிய நோக்கமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்