சிவசேனா சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி!

அரசியல்

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னம் இன்று (அக்டோபர் 8) தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள், உத்தவ் தாக்கரேவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இதனால் உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும், ஏக்னாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும் பிரிந்தன. இதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகினார்.

பின்னர், பா.ஜ.க. ஆதரவுடன், மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார்.

முதல்வராய்ப் பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டே, அடுத்து சிவசேனாவையும் கைப்பற்றும் நோக்கில் அதற்கான வேலைகளைச் செய்துவந்தார். அதுதொடர்பான ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்தில் அவர் பதிவு செய்திருந்தார்.

அதேநேரத்தில், இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா எனக் கோரி வருகிறது. இந்த நிலையில், சிவசேனாவின் சின்னமான வில் அம்பு சின்னத்தை விரைவாக தங்கள் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு கடிதம் எழுதியிருந்தது.

அந்தேரி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தங்களுக்கு அந்தச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, வில் அம்பு சின்னம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய உரிய சான்றுகளை வழங்கும்படி, உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் சமர்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சின்னம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதையடுத்து, தேர்தல் ஆணையம் இன்று (அக்டோபர் 8) தற்காலிகமாக வில் அம்பு சின்னத்தை முடக்கியுள்ளது.

இருதரப்பும் வேறு ஏதாவது ஒரு சின்னத்தை தேர்வு செய்து, வரும் அக்டோபர் 10ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அது மேலும் உத்தரவிட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

விபத்தில் ஹாட்ரிக் அடித்த ’வந்தே பாரத்’ ரயில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *