சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (டிசம்பர் 7) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார்.
அவர் தொடர்ந்து ஜாமீன் கேட்டு வரும் நிலையில் 12வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 15ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே கடந்த நவம்பர் 15-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு, செந்தில் பாலாஜிக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி அவரது பித்தப்பையில் கொழுப்புச் சத்து சேர்ந்து கற்களாக மாறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீரானது.
இதனையடுத்து, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து அவர் இன்று காலை 6.30 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ICC தரவரிசை: ரஷீத் கானை வீழ்த்தி புதிய சாதனை படைத்த ரவி பிஸ்னோய்