செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ராமதாஸ்

Published On:

| By Kavi

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோத பண மோசடி தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது ஜாமீனில் உள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்த போது, அவர் ‘தியாகம் செய்ததாக’ முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டதும் அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும் கடும் விமர்சனத்தைக் கிளப்பியது.

இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு எதிராக அவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வித்யா குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஏ.எஸ். ஓகா, “இது என்ன?கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைத்ததும் உடனடியாக அமைச்சராகி இருக்கிறார். இது நிறுத்தப்பட வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்தார்.

இந்தநிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் இன்று (டிசம்பர் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், “

ஊழல் கறை படிந்தவரை உடனடியாக அமைச்சராக்கியதன் மூலம் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரும் களங்கத்தைச் சேர்த்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.

உச்ச நீதிமன்ற நீதியரசர் எழுப்பிய வினாக்களையும் தெரிவித்த கண்டனத்தையும் தமிழக அரசை தலைமையேற்று நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி எழுப்பப்பட்ட வினாவாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் மாத இறுதியில் பிணை வழங்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டாவது நாளே செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது மட்டும் சிக்கல் அல்ல. அதையும் தாண்டி செந்தில் பாலாஜியை தியாகி என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியிருந்தார்.

அப்போதே அதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நான், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பவர் ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்களுக்கும் பொதுவானவர். நடுநிலை தவறாத நீதிபதியாக இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது தான் அவரது கடமை.

ஆனால், அவரோ கடமையை மறந்து விட்டு மோசடி செய்தவருக்கு வழக்கறிஞராக மாறி அவருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. செந்தில் பாலாஜியை முதலமைச்சர் வலிந்து வலிந்து ஆதரிப்பதையும், புகழ்வதையும் பார்க்கும் போது செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்கும் என்றோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றோ தோன்றவில்லை” என்று கூறியிருந்தேன்.

எனது ஐயம் சரியானது தான் என்பது இப்போது உச்சநீதிமன்ற நீதியரசர் தெரிவித்த கருத்தின் மூலம் உறுதியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் மிக அதிக அதிகாரம் பெற்ற அமைச்சராக செந்தில் பாலாஜி திகழும் நிலையில், அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. செந்தில் பாலாஜிக்கு எதிரான சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியானதாக இருக்காது. எனவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றும்படி உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!

புயல் பாதிப்பு… நிவாரணம் வழங்கப்படுமா? : ஸ்டாலின் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share