செந்தில்பாலாஜி மீதான பணமோசடி வழக்கு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Prakash

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளில், மீண்டும் புதிதாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 31) உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதனடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர்.

அவை சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தன் மீதான மூன்று வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பு, தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக செந்தில் பாலாஜி உள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தான் வழக்குப்பதிவு செய்துள்ளதால், அவற்றை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது.

புகார்தாரர்கள் தரப்பில் , ஏழ்மையான மக்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் செந்தில் பாலாஜி மீதான புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது இன்று (அக்டோபர் 31) உத்தரவு பிறப்பிப்பதாக கூறி கடந்த அக்டோபர் 28ம் தேதி இவ்வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக இன்று (அக்டோபர் 31) தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், ”செந்தில்பாலாஜி மீதான புகார்களை மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும்” என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி வி.சிவஞானம் இன்று உத்தரவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.

ஜெ.பிரகாஷ்

நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் ஏன் தெரியுமா? – அண்ணாமலை

மோர்பி பாலம் விபத்து: மல்லிகார்ஜுன கார்கே முக்கிய கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel