அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 29) ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆஜர்படுத்தினர்.
அப்போது செந்தில் பாலாஜி மீதான 120 பக்க குற்றப்பத்திரிகையையும் 3 ஆயிரம் பக்கத்திற்கான ஆவணங்களையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. அன்றைய தினம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இதனிடையே, செந்தில் பாலாஜி வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 12 ஆம் தேதி அமலாக்கத் துறை எம். பி., எம். எல். ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
அமலாக்கத் துறையின் மனுவை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 25ஆம் தேதியுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மதியம் புழல் சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தன்னால் விசாரிக்க முடியாது என்றும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகவும் அறிவுறுத்தினார்.
இந்த வழக்கு விசாரணையின் போது 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் செந்தில் பாலாஜி தரப்புக்கு வழங்கப்பட்டது.
இந்தநிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் முறையிட்டார். அவரது முறையீட்டை கேட்டுக்கொண்ட நீதிபதி அல்லி “பார்க்கலாம்” என கூறினார்.
செல்வம்