எனது வீட்டில் ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 12) தெரிவித்துள்ளார். Sengottaiyan clarifies no meeting
கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி கோவை மாவட்டம் அன்னூரில் அத்திக்கடவு – அவிநாசி திட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழ் மற்றும் டிஜிட்டல் பேனர்களில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் இடம்பெறாததால் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அவரது பேச்சு அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் செங்கோட்டையன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்திருந்தனர்.
அக்கட்சியின் தொண்டர்களே, செங்கோட்டையன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து டிஜிபி அறிவுறுத்தலின் பேரில், ஈரோடு மாவட்டம் கோபி அருகே குன்னம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டிற்கு ஒரு ஆய்வாளர் மற்றும் 3 போலீசார் அடங்கிய துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு நேற்று (பிப்ரவரி 11) போடப்பட்டது.
இந்தநிலையில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, செங்கோட்டையன் தனது இல்லத்தில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியானது. அந்தியூர், கோபி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் செங்கோட்டையன் வீட்டில் குவிந்தனர்.
இன்று காலை கோவை பேரூரில் உள்ள பட்டீஸ்வரன் கோவிலுக்கு சென்றுவிட்டு கோபியில் உள்ள தனது வீட்டிற்கு செங்கோட்டையன் திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “எனது வீட்டில் ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை. தினமும் என்னை சந்திக்க 100 முதல் 200 தொண்டர்கள் வீட்டிற்கு வருவார்கள். அந்தியூரில் நடைபெற உள்ள எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளார்கள்” என்று தெரிவித்தார். Sengottaiyan clarifies no meeting