உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி? செல்வப்பெருந்தகை ரியாக்ஷன்!
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் காங்கிரஸ் கட்சி வரவேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஜூலை 22) தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செல்வப்பெருந்தகை முன்னிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் வடசென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மதுரை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 25 பேர்
டி.என்.அசோகன் ஏற்பாட்டில் காங்கிரசில் இணைந்தனர். இதேபோல, அதிமுக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டபோது தமாகா நிர்வாகிகள் பலரும் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து வாழ்த்தினார்கள். அதன்பின், தமாகா தலைமை நிலைய செயலாளராக இருந்த டி.என்.அசோகன் காங்கிரஸில் இணைந்தார். அவரது ஏற்பாட்டில், தமாகா நிர்வாகிகள் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை,
“முதன் முதலில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது தான் தலித் மக்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முதலமைச்சராக கக்கனையும், அமைச்சராக பரமேஸ்வரனையும் காங்கிரஸ் கட்சி தான் கொண்டு வந்தார்கள்” என்றார்.
தொடர்ந்து, “உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்போவதாக செய்திகள் வருகிறதே?” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வந்தால் காங்கிரஸ் கட்சி வரவேற்கும்” என்றார்.
இந்நிகழ்வில், தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நீட் குளறுபடி: சர்ச்சைக்குரிய கேள்வியை ஆய்வு செய்ய நிபுணர் குழு… உச்சநீதிமன்றம் உத்தரவு!
“ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் பார் கவுன்சில் தேர்தல்” : பிஎஸ்பி தலைவர் ஆனந்தன் ஷாக் தகவல்!