உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர் போல முதல்வர் ஸ்டாலின் விதவிதமான உடையணிந்து பின்னி எடுக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை பரவை பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐடிரெய்டு மிகதாமதமாக நடக்கிறது. இது முன்கூட்டியே நடந்திருந்தால் கள்ளச்சாராய மரணம், போலி மதுவால் ஏற்பட்ட மரணம் உள்ளிட்டவை நடந்திருக்காது. சோதனைக்கு வந்த ஐ.டி அதிகாரிகளை தாக்குவதன் மூலம் திமுக வன்முறை கட்சி என்பதை காட்டுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்று பயணம் இன்பசுற்றுலா போலதான் இருக்கிறது. அவர் முதலீடுகளை ஈர்க்க செல்லவில்லை. முதலீடு செய்வதற்கு சென்றுள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர்.,போல விதவிதமாக கோட் சூட் போட்டு பின்னி எடுக்கிறார். அதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. திமுக ஒரு விளம்பர அரசு, செயல்படுகிற அரசு அல்ல.
காவல்துறை டிஜிபி.,யை சுதந்திரமாக செயல்பட விடவில்லை. அவருடைய கை கட்டப்பட்டுள்ளது. அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமிழ்நாட்டில் மதுவால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.
புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்வில் திமுக பங்கேற்க வேண்டும். செங்கோல் மீது மத சாயம் பூச கூடாது. செங்கோல் விஷயத்தில் உண்மையான தமிழனாக நாம் பெருமைப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் முர்மு வெற்றி பெறுவதற்கு உதவாத திமுக, இன்று அவர்களை திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை என சொல்வது வெளிவேஷம்.
ஐ.பி.எல்., போட்டியில் சி.எஸ்.கே தான் வெற்றி பெற வேண்டும். தோனி கோப்பையை கைப்பற்ற வேண்டும். “தல” என சொல்லப்படுபவர்கள் யாரும் தல இல்லை.”உண்மையான தல” தோனி ஜெயிக்க வேண்டும்” என்றார்.
செல்வம்
“ஆருத்ரா வழக்கில் இரண்டு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்”: ஐஜி ஆசியம்மாள்
இறுதி போட்டிக்கு செல்லப்போவது யார்? குஜராத்-மும்பை பலப்பரீட்சை!