மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள ஜான்சிராணி பூங்கா அருகில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று கை ரிக்சா வண்டிகளில் மதுரை மாநாடு விளம்பரப் பதாகையை பொருத்தி, தொழிலாளர்களுக்கு வேட்டி சட்டை வழங்கினார். தொடர்ந்து தொண்டர் ஒருவரின் ரிக்சா ஒன்றில் ஏறி சிறிது தூரம் ஓட்டி சென்றார்.
பின்னர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அதிமுக என்கிற கோவிலுக்குள் இருக்கும் வரை கல்லாக இருந்தாலும் மதிப்போம். கோவிலை விட்டு வெளியே சென்றால் அவர்களை மிதித்து விட்டு சென்று விடுவோம்.
துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போதே கொடநாடு வழக்கு விசாரணை குறித்து அவருக்கு நன்றாக தெரிந்திருந்தும், இப்போது போராட்டம் நடத்துகிறார் என்றால் அவரது நோக்கம் என்ன என கேள்வி எழுகிறது.
எங்களை பொறுத்தவரையில் அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர் அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். என்டிஏ கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்த மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமியின் அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை.
காவல்துறையினர் ஸ்பாட் பைன் என்ற பெயரில் மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர். திமுக ஆட்சியில் விலைவாசி உள்ளிட்ட எல்லாமே வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது” என்று கூறினார்.
செல்வம்
“நவம்பரில் கூட்டணி குறித்து முடிவு” டிடிவி தினகரன்
இறங்கி வந்து விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…நெகிழ்ந்த சி.ஆர்.சரஸ்வதி