வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தொண்டர்கள் அவருக்காக வேலை பார்க்க வேண்டும் என்பதற்காகதான் திருநாவுக்கரசு இப்படி பேசி வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையம் அருகில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு வகையில் விளம்பர யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை முனிச்சாலை பகுதியில் இருக்கக்கூடிய ஓபுலா படித்துறையிலிருந்து இருசக்கர விழிப்புணர்வு வாகன பேரணி இன்று (ஆகஸ்ட் 14) தொடங்கியது.
இந்தப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. தொடர்ந்து தொண்டர்களோடு இணைந்து திறந்தவெளி அமைப்பாக இருக்க கூடிய நான்கு சக்கர வாகனத்தில் பயணித்தார்.
இந்த இரு சக்கர வாகன பேரணியானது முனிச்சாலை வழியாக வந்து இறுதியாக அண்ணாநகர் பகுதியில் அமைந்திருக்க கூடிய எம்ஜிஆர் ஜெயலலிதா சிலை அருகே நிறைவு பெற்றது.
கட்சித் தொண்டர்களுடன் இணைந்து எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில்,
”இந்த பொன்விழா எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெறும். இந்த மாநாட்டிற்கு பிறகு திமுக ஒரு தேய்பிறையாக தான் இருக்கும். திமுக ஆட்சி மிக விரைவில் மக்களால் தூக்கி எறியப்படும் என்கின்ற நிலை ஏற்படும்.
அதற்கு அச்சாரம் கூறுகின்ற வகையில் இன்று தொண்டர்கள் ஆர்ப்பரித்து இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள். நேற்று இரவு தான் இருசக்கர பேரணிக்கு உரிய அனுமதி கிடைக்கப்பெற்றது.
நேற்று இரவுக்கு பிறகு இவ்வளவு தொண்டர்களிடத்தில் கைப்பேசி மூலமாக சொல்லி நிர்வாகிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றால் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அனுமதி கொடுத்திருந்தால் இன்னும் மாபெரும் பேரணியாக அமைந்திருக்கும்.
தற்போது அங்கிருந்து 15 நிமிடத்திற்குள்ளாக நாங்கள் வந்திருக்கிறோம். எந்த ஒரு பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல், காவல்துறைக்கும் பாதிப்பு இல்லாமல் நாங்கள் வந்திருக்கிறோம்.
இந்த மாநாடு வெற்றி பெறும் என்பதற்கு அத்தாட்சி தான் இந்த பேரணி. ஆளுங்கட்சி பேரணியா? எதிர்க்கட்சி பேரணியா என்று எண்ணுகிற அளவிற்கு இந்த பேரணி அமைந்திருக்கிறது.
திருநாவுக்கரசர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும். திமுகவின் ஆதரவு வேண்டும் என்பதற்காக தன்னுடைய மனசாட்சியை ஒத்திவைத்துவிட்டு இவ்வாறு பேசுகிறார்.
மனசாட்சிக்கு விரோதமாக பதில் சொல்லியிருக்கிறார். அன்றைக்கு வந்திருந்த விளம்பரங்கள் செய்திகள் அனைத்தும் உள்ளது. பாஞ்சாலி சபதம் போல் ஜெயலலிதா எவ்வளவு கொடூரமாகத் தாக்கப்பட்டது, சேலையை இழுத்து, தலைமுடியை பிடித்து தாக்கிய காட்சிகளை அங்கேயே இருந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தோலுரித்து காட்டியிருக்கிறார்.
அவருடைய நல்ல எண்ணம் தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினுடைய பொதுச்செயலாளராக இருக்கிறார்.
அறந்தாங்கியில் இருக்கக்கூடிய திருநாவுக்கரசு யார் என்று தெரியுமா? அவருக்கு விலாசம் கொடுத்தது அதிமுக தான். அன்றைக்கு பொதுச் செயலாளராக இருந்த எம்ஜிஆர் தான் அவரை அமைச்சராக துணை சபாநாயகராக அமர்த்தி அழகு பார்த்தவர்.
தன் அருகாமையில் வைத்திருந்து இளைஞர் அணிக்கு மாநிலத்தின் செயலாளர் பதவியும் கொடுத்து அழகு பார்த்தது எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா தான்.
என்னதான் திருநாவுக்கரசு கருத்து மாறுபாடு காரணமாக போனாலும் மீண்டும் அவரை அழைத்து மரியாதை கொடுத்து மதிப்பு கொடுத்த ஜெயலலிதாவிற்கு மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் விதமாக திருநாவுக்கரசு சொல்லியிருக்கிறார் என்று தான் கருதுகிறேன்.
உண்மையில் அவர் மனசாட்சி பிரகாரம் சொல்லவில்லை. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தொண்டர்கள் அவருக்கு வேலை பார்க்க வேண்டும் என்பதற்காகவும் திமுகவின் தலைவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான் மனசாட்சியை அடகு வைத்து இப்படி பேசி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார் செல்லூர் ராஜூ.
இராமலிங்கம்
செந்தில்பாலாஜி தம்பி கைது: அமலாக்கத்துறை மறுப்பு!
“எத்தன ஜெகதீஸை, அனிதாவை நாங்க இழக்கணும்?”: உதயநிதியிடம் நேருக்கு நேர் மாணவர் கேள்வி!