”பீகார் வழியில் தமிழகத்திலும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” – சீமான்

Published On:

| By Selvam

தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என எண்ணிக்கை நடத்தி, பட்டியல் பிரிவிலிருந்து அவர்களை நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நேற்று (அக்டோபர் 14) பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது, “சாதி வாரி, மொழி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை. சமூகநீதி, பெரியார் மண் என பேசும் திராவிட கட்சிகள் குடிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பது ஏன்?

பீகாரில் பெரியார் பற்றியெல்லாம் பேசாத நிதிஷ்குமார் குடிவாரி கணக்கெடுப்பு எடுக்கிறார்.

எது உண்மையான சமூக நீதி? நீதிஷ்குமார் எடுக்கும் போது, நீங்கள் குடிவாரி, சாதி வாரி, மொழி வாரி கணக்கெடுப்பு எடுக்க தயங்குவது ஏன்?

தமிழக மக்களை திராவிட கட்சிகள் வஞ்சித்தது அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதற்காக எடுக்க மறுக்கின்றனர்.

தேவேந்திர குல வேளாளர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என எண்ணிக்கை நடத்தி பட்டியல் பிரிவிலிருந்து அவர்களை நீக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டவன் என யாராவது அவர்களை சொன்னால் மறைந்த அப்பா மணிவண்ணனின் செருப்பு என்னிடம் உள்ளது அதாலேயே அடித்து விடுவேன்.

குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள் இல்லையென்றால், சமூக நீதி பற்றி பேசுவதை திராவிட கட்சிகள் விடுங்கள். யாரையும் நாங்கள் ஏமாற்ற மாட்டோம். யாரிடமும் ஏமாற மாட்டோம்.

பீகார் எந்த வழியை பின்பற்றியதோ அதே போல் இங்கும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் அதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும்.

seeman urge tamil nadu govt to conduct caste census

ஸ்டாலின் ஒன்றுமே செய்யவில்லை என அண்ணாமலை சொல்கிறார். கடந்த 8 ஆண்டுகளாக மோடி என்ன செய்தார்.

ராஜராஜ சோழன் இந்துவா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ராஜராஜ சோழன் ஆண்ட காலத்தில் இந்தியாவும் இல்லை இந்துவும் இல்லை வரலாற்றை படிக்க வேண்டும்.

அவர் கட்டிய கோயில் சைவக் கோயில் என்றும் அவர் சைவ மரபினர் என்றும் தான் வரலாற்றில் உள்ளது. நாங்கள் வீர சைவர்கள் எங்களை மத மாற்றம் செய்ய முயற்சிக்காதீர்கள், வள்ளுவருக்கும் காவி சாயம் பூச பாஜக முயற்சிக்கிறார்கள்.

இசைஞானி இளையராஜா ஈடு இணையற்ற சாதனையாளர். தலித் அடிப்படையில் அவருக்கு எம்.பி பதவி கொடுக்கப்பட்டதாக சொல்கின்றனர்.

அதை இளையராஜா நிராகரித்து இருக்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலையிடம் நான் கெஞ்சி கேட்கிறேன், எப்படியாவது ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி வாங்கி கொடுத்து விடுங்கள்.” என்று சீமான் பேசினார்.

செல்வம்

கடுமையான வலை பயிற்சியில் விராட் கோலி

ஜெய்பீமை பின்னுக்குத் தள்ளிய காந்தாரா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share