திமுகவுக்கு ரூ.400 கோடி – எனக்கு ஃப்ரீ: பிரஷாந்த் கிஷோருக்கு நன்றி சொன்ன சீமான்

அரசியல்

4 ரூபாய் கூட வாங்காமல் இந்தியா முழுமைக்கும் என்னை தெரியப்படுத்திய பிரசாந்த் கிஷோருக்கு நன்றி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதனை கண்டித்து இன்று (மார்ச் 14) பிற்பகல் 3 மணியளவில் கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்தம் அருகில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய சீமான், “வட இந்தியர்கள் அதிகமாக வருகிறார்கள். அதை முறைப்படுத்துங்கள் என்றுதான் நான் பேசினேன். பிரசாந்த் கிஷோரை நான் பாராட்டுகிறேன். நீங்கள் பீகாரி. அதனால் பீகாரிகளுக்கு உண்மையாக இருக்கிறீர்கள். நான் தமிழன். அதனால் என் இனத்துக்கு உண்மையாக இருக்கிறேன். அவ்வளவுதான்.

மிரட்டலுக்கு பணிகிற ஆள் நான் கிடையாது. 1.25 கோடிக்கும் அதிகமானோர் இங்கே வந்து குடியேறுவதால் சிறுக சிறுக நாம் வேலைவாய்ப்பை இழப்போம். இன்று கூலியாக இருப்பவர்கள் நாளை முதலாளியாக மாறுவார்கள். நிலம் அவர்கள் கைக்கு போகும்.

நாம் நிலமற்றவர்களாக போவோம். இது வரலாறு எங்கும் நிகழ்ந்திருக்கிறது. அதனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வேலைக்கு வருபவர், எந்த மாநிலத்தில் இருந்து வருகிறார், எத்தனை நாட்கள் தங்குவார், எங்கு தங்குவார், என்ன வேலை செய்கிறார் என்பதை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அவரை கண்காணிக்க முடியும்.

ஏனென்றால் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நம் குழந்தையை வன்புணர்வு செய்துவிட்டு போகிறார்கள். அதற்கெல்லாம் யாரும் ஐயோ பாவம் என்று சொல்லவில்லை.

நேற்று 12 தமிழக மீனவர்களை சிங்களர்கள் கைது செய்துள்ளனர். வயிற்று பசிக்கு மீன் பிடிக்கத்தானே போனார்கள் என்று யாரும் பாவம் பார்க்கவில்லை.

அது ஏன் நான் அடிவாங்கும் போது நன்முறையாக இருக்கிறது. மற்றவர்கள் அடிவாங்கும் போது வன்முறையாக இருக்கிறது. யார் அடித்தது? எந்த தமிழர் அடித்தது?. அவர்கள் தான் தமிழகத்தை அடிக்கிறார்கள். உடனே, வன்முறையை தூண்டிவிட்டார், இரு இனங்களுக்கு இடையே பகையை தூண்டிவிட்டார் என்று பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

400 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு திமுகவுக்கு வேலை செய்தவர், 4 ரூபாய் கூட வாங்காமல் என்னை இந்தியா முழுமைக்கும், இப்படி ஒருவர் இருக்கிறார் என்று தெரியப்படுத்திவிட்டார். இதற்கே பிரசாந்த் கிஷோருக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும்” என்று பேசினார்.

முன்னதாக, வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவது போல பேசியிருந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று பிகாரை சேர்ந்தவரும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் வியூக நிபுணராகவும் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் மார்ச் 10 ஆம் தேதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேசிய ஒருமைப்பாட்டிற்கு களங்கம் விளைவித்தல், 153 (B) (C), வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் 505 (1), மிரட்டல் விடுத்தல் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சீமான் மீது வழக்குப்பதிவு செய்ததற்காக தமிழக முதல்வருக்கு பிரஷாந்த் கிஷோர் நன்றி தெரிவித்தார். சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று பிரஷாந்த் கிஷோரை டேக் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தது.

இந்தசூழலில் கடலூரில் பேசிய சீமான் பிரஷாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிரியா

ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது நடவடிக்கை கூடாது : நீதிமன்றம்!

இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு: தமிழ்நாடு அரசு

+1
0
+1
3
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0