31 ஆண்டுகள் சிறைவாவாசத்துக்கு பிறகு நேற்று விடுதலையான 6 பேரில் நால்வரை சிறப்பு முகாமில் விடிய, விடிய நாற்காலியிலேயே அமர வைத்திருந்ததற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் மீதமிருந்தவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
15 மணி நேரம் கொடுமை!
எனினும் இலங்கை தமிழர்களான ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமிற்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு உரிய அறைகள் ஒதுக்காமல் சுமார் 15 மணி நேரம் நாற்காலியில் மட்டுமே அமர வைத்த கொடுமை நடந்தேறியுள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீமான் கண்டணம்!
அவரது பதிவில், ”31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்ட தம்பி ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகிய நால்வரையும் திருச்சி, சிறப்பு முகாமுக்கு அழைத்துச்சென்றனர்.
ஆனால் 15 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுக்கு எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்யாது, ஓய்வெடுக்கவும் விடாது விடிய விடிய நாற்காலியிலேயே அமர வைத்திருந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
நீண்ட நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர்களை சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைக்காது மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், முதல் நாளே சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா