இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 29) கர்நாடக மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. அதன்படி மே 10 ஆம் தேதி கர்நாடக மாநில தேர்தல் நடக்கிறது.
கர்நாடக தேர்தல் அறிவிப்போடு ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் சில மாநில சட்டமன்ற இடைத் தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் அதே தேதியில் அறிவித்துள்ளது.
அதன்படி பஞ்சாபின் ஒரு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் தேர்தல் அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பஞ்சாபின் ஜலந்தர் (தனி) மக்களவைத் தொகுதி, ஒடிசாவின் ஜர்சுகுடா சட்டப் பேரவைத் தொகுதி, உத்தரப் பிரதேசத்தின் சன்பே (தனி) சட்டப் பேரவைத் தொகுதி, . உத்தரப் பிரதேசத்தின் சுவார் சட்டப் பேரவைத் தொகுதி, மேகாலயாவின் சோஹியாங் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி ஆகியவற்றுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜலந்தர் மக்களவைத் தொகுதி மற்றும் ஜர்சுகுடா, சன்பே சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதன் உறுப்பினர்கள் காலமானதால் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. சுவார் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மேகாலயாவின் சோஹியாங்கில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது அந்த தொகுதியைச் சேர்ந்த ஐக்கிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் காலமானதால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது தேர்தல் நடத்தப்படுகிறது.
ஒரு மக்களவைத்தொகுதி மற்றும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 10 ஆம் தேதி, இடைத்தேர்தல் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் உள்ளிட்ட நடைமுறைகள் கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான அதே அட்டவணையைக் கொண்டுள்ளன.
அதாவது வேட்பு மனு தாக்கல், 13.04.2023 அன்று தொடங்குகிறது. 20.04.2023 அன்று மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை 23.04.2023 அன்று நடைபெறும். வேட்புமனுக்களை விலக்கிக்கொள்வதற்கான கடைசி நாள் 24.04.2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.
10.05.2023 அன்று தேர்தல் நடத்தப்பட்டு 13.05.2023 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வயநாடு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
–வேந்தன்
நடுரோட்டில் காதல் ஜோடியின் செயல்: திகைத்து பார்த்து மக்கள்!
வேங்கைவயலுக்கு செல்லும் நீதிபதி