அதிமுக மற்றும் பாஜக கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் தன்னிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று (மார்ச் 2) தெரிவித்தார்.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் ரோட்டரி கிளப் சார்பாக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசும்போது,
“திமுகவைத் தவிர அதிமுக மற்றும் பாஜக கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் என்னிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இரண்டு மூன்று நாட்களில் எனது கட்சியின் உயர் மட்ட குழு நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.
தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணியை அறிவிக்கிறேன். வேட்பாளர்கள் தயார் நிலையில் தான் இருக்கிறார்கள் மக்களின் முன்னேற்றம், தொழில் வளம், வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் இதுவே எங்களது பிரதான கோரிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் மாநிலங்களான கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும் போதை கலாச்சாரம் பெருகி உள்ளது. அதை காவல்துறை கண்காணித்து, பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு இருந்தால், தண்டனை வழங்கி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
திமுகவின் மூன்று ஆண்டு கால ஆட்சியில் கடன் அதிகரித்துள்ளது. 6 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது 8.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த கடனை எப்படி அடைக்கப் போகிறார்கள்? அதற்கான என்ன திட்டத்தை தமிழக அரசு வைத்திருக்கிறார்கள்? தொடர்ந்து இலவசங்களை வழங்கி கொண்டே இருக்கிறார்கள். மக்களே இலவசம் வேண்டாம் என்று சொல்ல வேண்டும், கல்விக்கும் மருத்துவத்துக்கும் மட்டும் தான் இலவசம் வழங்க வேண்டும்.
மிக்சி, கார்,பைக், கிரைண்டர் போன்ற பொருட்களை இலவசமாக வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும்..
இதனால் கஜானா காலியாக உள்ளது. மக்களே இலவசம் வேண்டாம் என்று சொன்னால்தான் கடன் தொல்லையில் இருந்து தமிழகம் மீள முடியும்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திரும்பத் திரும்ப கேட்போம்… தொகுதி பங்கீடு பற்றி திருமா பேட்டி!