உக்ரைன் போரில் பெண் கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா திட்டம்!

Published On:

| By Minnambalam

ரஷ்ய சிறையில் உள்ள பெண் கைதிகளை உக்ரைன் போரில் ஈடுபடுத்த ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டுள்ள தகவல் வெளிவந்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய நண்பராக இருப்பவர் எவ்ஜெனி பிரிகோஜின். இவர், பணத்துக்காக எந்த நாட்டுக்காக வேண்டுமென்றாலும் கூலிப்படையாகச் செயல்படும் துணை ராணுவ அமைப்பான வாக்னர் என்ற குழுமத்தின் நிறுவனராகவும் இருந்து வருகிறார்.

இதை தவிர, உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதனால், புதினின் விருப்பத்துக்குரிய சமையற்காரராகவும் அவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்வெர்ட்லோவ்ஸ்க் பகுதியைச் சேர்ந்த, புதினின் நம்பிக்கைக்குரிய மற்றும் அரசியல்வாதியான வியாசெஸ்லாவ் வெக்னர் என்பவர் பிரிகோஜினை தொடர்பு கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து பெண் கைதிகள் குழு ஒன்று பிரிகோஜினை சந்தித்துள்ளது. அவர்கள் உக்ரைனில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொலைதொடர்பு பணியாளர்களாக வேலை செய்ய பயிற்சி பெற்றுள்ளனர் என பிரிகோஜின் கூறியுள்ளார்.

மேலும் அந்தப் பெண் கைதிகள் உக்ரைனில் தாக்குதல் நடத்தும் நபர்களாகவும் செயல்படுவார்கள்.

போரில் இதுபோன்ற திட்டங்கள் பரவலாக செயல்படுத்தப்படும் என்பது ஒவ்வொருவருக்கும் நன்றாக தெரியும். அந்த திசையிலேயே நாங்கள் பணியாற்றி வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் 11 மாதங்களை நெருங்கியுள்ளது. இந்தப் போரில், ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், போர் முடிவுக்கு வராத நிலையில் ரஷ்ய படை வீரர்கள் எண்ணிக்கையை 15 லட்சம் ஆக விரிவுப்படுத்த பாதுகாப்பு மந்திரி செர்கெய் ஷொய்கு முன்மொழிந்த நிலையில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

சிறுமிகள் கூட்டுப்பாலியல்: 7 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share