Conspiracy to cancel reservation in higher education
உயர்கல்வியில் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய ஆர்எஸ்எஸ்-பாஜக சதி செய்துள்ளது என்றும் இதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான பணியிடங்களுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை பொதுப் பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டது.
இந்த அறிவிப்பு மிகப்பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் காங்கிரஸ், திமுக, பாமக என நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் PTI க்கு அளித்த பேட்டியில்,
“இடஒதுக்கீடு பணியிடங்களை பொதுப் பிரிவின் கீழ் நிரப்புவதற்கான திட்டம் எதுவும் இல்லை. ஒரு இடஒதுக்கீடு பதவியும் நீக்கப்படாது” என்று கூறினார்.
இந்த நிலையில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி யுஜிசியின் அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய வரைவில், உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர சதி நடக்கிறது.
இன்று, 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் தோராயமாக 7,000 இடஒதுக்கீட்டுப் பணியிடங்களில், 3,000 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 7.1% தலித், 1.6% பழங்குடியினர் மற்றும் 4.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே பேராசிரியர்களாக உள்ளனர்.
இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசி வரும் பாஜக – ஆர்எஸ்எஸ், இப்போது உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றனர்.
சமூக நீதிக்காகப் போராடும் மாவீரர்களின் கனவுகளைக் கொன்று, தாழ்த்தப்பட்ட பிரிவினரின் பங்களிப்பை அழித்தொழிக்க முயற்சிக்கின்றனர்.
இதுதான் பாஜகவின் அடையாள அரசியலுக்கும், உண்மையான நீதிக்கும் உள்ள வித்தியாசம். இதுதான் பாஜகவின் குணாதிசயம். இதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது.
சமூக நீதிக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம், மேலும் உயர்கல்வி நிறுவனங்களில் காலியிடங்களை இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களைக் கொண்டு மட்டுமே நிரப்புவோம்” என்று என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதி வெளியானது!
ஜடேஜா, கே.எல்.ராகுல் அவுட்: குட்டி சிங்கத்திற்கு வாய்ப்பளித்த பிசிசிஐ
ராணுவத்தினரிடம் குறைந்து வரும் ஃபிட்னஸ் : அதிரடி கொள்கை அறிவிப்பு!
Conspiracy to cancel reservation in higher education