சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் இன்று (ஜூன் 5) ஆஜரானார்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் பணிபுரியும் 3 பேர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்த சென்ற ரூ.4 கோடியை தேர்தல் ஆணைய பறக்கும் படையினர் மற்றும் தாம்பரம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுத்தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடையதாக பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி இருந்தது.
தொடர்ந்து, ரயிலில் எடுத்து செல்லப்பட்ட பணத்திற்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கேசவ விநாயகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை ஜூன் 3ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், “ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கினை சட்டவிரோத வழக்காக எப்படி கூற முடியும். சிபிசிஐடி சார்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் ஆஜராக வேண்டும்” என கேசவ விநாயகத்திற்கு உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை நாளை (ஜூன் 6) ஒத்திவைத்தார்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இன்று (ஜூன் 5) சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் விசாரணைக்கு ஆஜரானார்.
தொடர்ந்து, சிபிசிஐடி அதிகாரிகள், கேசவ விநாயகத்திடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறேன்” : சந்திரபாபு நாயுடு பளீச்!