“நிதியமைச்சர் பிடிஆர் ஆடியோ மீது உரிய விசாரணை எடுக்கப்பட்டு வருகிறது.” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். எனினும், அது போலியானது என்றும், ஆடியோவில் உள்ளது போன்று தாம் யாரிடமும் பேசவில்லை என்றும் நிதி அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.
இதுகுறித்து ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”ஆடியோ குறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணியை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது.
இதுபற்றி மேலும் பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுவர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ரவியிடம், திராவிட மாடல், சனாதனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர்.
அப்போது, “பிடிஆர் ஆடியோ மீதான விசாரணைக்காக நீங்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஆளுநர், அது முறையாக என்னிடம் கொண்டு வரப்பட்டதால்
உரிய விசாரணை எடுக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா